அட்சயலிங்கசுவாமி ஆலயத்தின் தனி சிறப்பு


       திருக்கோவில் திருத்தல தனி சிறப்பு 

           மண்டுபேரொளியான கேடிலியை அர்ச்சித்த
                  வள்ளி நாயகன் வருகவே!
              மாகாளி காத்த கீழ்வேளூரில் மாதவம்
                 வளர்த்த வேலவன்வருகவே !
      -ஷேத்திரகோவை பிள்ளைதமிழ் –வாரானைப்பருவம்
காஞ்சி ஸ்ரீ சிதம்பரமுனிவரின் இப்பாடல் வரிகள் வீரஹத்தித் தோஷம் நீங்க குமரக்கடவுள் இத்தலத்தில் தவமியற்றி வழிபட்ட வரலாற்றை விளங்க செய்கிறது குமரக்கடவுள் பூசித்தமையால் இத்தலம் பூசரண்யபுரமென்று சிறப்பிக்கப்படுகிறது.
இத்திருத்தலம் மகா கல்பம் என்று சொல்லபடுகின்ற ஒரு பிரம்ம கல்பம் முடிந்து உலகமெங்கும் மகா பிரளயம் என்ற பேரூழியால்  நீர் சூழ்ந்து உயிர்கள் அனைத்தும் மூலபொருளாக விளங்கும் சிவபிரானிடத்தில் ஒடுங்கி இருந்து பின் மீண்டும் இறைவர் உயிர்களை படைக்கதொடங்கும்.சிறப்புக்குரியது   ஆகும்.திருக்கடவூர்
திருத்தலத்தில் காலனை காலால் உதைத்து தனது பக்தனாகிய ஸ்ரீ மார்கண்டேய மகரிஷிக்கு “என்றும்  பதினாறு “ என்ற பெரும்பேற்றை அளிக்க ,அவரும் யுகங்கள் தோறும் இடைவிடாது சிவபூஜை செய்து வருகையில் பிரம்ம கல்ப முடிவினால் பேரூழி ஏற்பட அதனால் தன் சிவபூஜைக்கு இடையூறு வருகிறதே என்று வருந்தி இறைவனிடம் பேரூழியிலும் இடையூறின்றி சிவபூஜை நிகழ்த்த ஓர் இடத்தைக் காட்டியருளும்படி வேண்டி நிற்க,இறையனாரும் “மிகுந்த மகத்துவங்கள் நிறைந்ததும் ,நமக்கு மிகவும் விருப்பமுடையதுமான  தக்ஷிண பதரிகாரண்யத்தலம் சென்று நீர் நம்மை தொடர்ந்து வழிபட்டு வரலாம் “என்று திருவாய் மலர்ந்தருளியபடி ஸ்ரீ மார்கண்டேய முனிவரும் இத்தலம் வந்து தங்கி தனது சிவவழிபாட்டை விடாது தொடர்ந்த சிறப்புக்குரியது இத்தலம்.இத்தலத்தில் பாரதத்தின் பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைமூர்த்தங்கள் எல்லாம் தனி தனியே சன்னதி கொண்டு இத்தலபிரகாரம் முழுவதும் விளங்குவதில் இருந்தே இத்தலத்தின் தொன்மையும் ,பேரூழியிலும் அழிவின்றி விளங்கும் தனிசிறப்பும் சொல்லாமல் விளங்கும். 

 மேலும் தன் மைந்தனாம் குமரனின் தவம் காக்க அன்னை எட்டு திருகரங்களுடன் பத்ரகாளி திருஉருவாய் ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன்  என்ற பெயரோடு விளங்குவதும் ,இந்திரன் சாபம் நீங்க வழிபட்ட தேவ நாயகர் எழுந்து அருளி இருப்பதும் இசை கலைஞர்களுக்கு இசை ஞானம் வழங்கும் விதத்தில் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி வீணாதர தெட்சிணாமூர்த்தி ஆக அருள்வதும் ,ஆடல்வல்லான் தமிழ் முனியாம் அகத்தியருக்காக தேவசபையோடு கால் மாறி ஆடிய சிறப்புடையதும்,ஸ்ரீ குபேர பகவான் இத்தல இறைவனை யுகாதி திருநாளாம் அக்ஷய திருதியை திருநாளில் வழிபாடுகள் செய்து அதன் பயனாய் சங்கநிதி பதுமநிதிகளோடு  குபேரபட்டம் பெற்று அளகாபுரி ஆட்சிபொறுப்பைபெற்றபெருமைக்குரியதும்,பஞ்சபூதங்களுக்கு உரிய லிங்கங்களும் தனி தனியே கோவில் கொண்டு அருளும் புகழ் உடையதும்,ஸ்ரீ விநாயக பெருமான் ,சுந்தர கணபதியாக முக்குறுனிபிள்ளையாராகவும்,முப்பத்திரண்டு  கணபதிகள் எழுந்து அருளியிருக்கும் சிறப்புடையதுமான ,திருக்கீழ்வேளூர் திருத்தலத்தில் எழுந்தருளி  அருளும் இறைவர் அ/மி அட்ச்யலிங்கசுவாமி என்கிற அ/மி கேடிலியப்பர் .அம்பிகை ஸ்ரீ சுந்தர குசாம்பிகை என்கிற அருள்மிகு வனமுலை நாயகி ,இங்கு தல விருட்சம் இலந்தை (பதரி) மரமாகும் .மூவர் தேவாரம் பெற்ற சிறப்பும் உடையது இத்திருத்தலம்.

அட்சயலிங்கசுவாமி திருத்தல வரலாறு

                 திருக்கோயில் திருத்தலவரலாறு                                

  

     பண்டைய சோழ வளநாட்டின்ஒரு பகுதியாக இன்று விளங்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளங்கும் உன்னத திருத்தலமாகிய  இந்த திருகிழ்வேளூர் திருத்தலம். விடங்கத் தியாகேசர் திருவருள் புரியும் திருவாரூர்த் திருத்தலத்திற்கு கிழக்கே 12 கி.மீ. தொலைவிலும், கடல்நாகைக் காரோணம் மேவியிருக்கும் காயாரோகண சுவாமி காட்சி தரும் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும், தேவகுரு வழிபாடு செய்த தேவகுருநாத சுவாமி தரிசனம் தந்தருளும் திருத்தேவூர் திருத்தலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவிலும், மலரும் மருகல் உடைய பெருமானாம் மாணிக்கவண்ணர் திருமணப்பேறு தந்தருளும் திருமருகல் திருத்தலத்திற்கு தெற்கே 14 கி.மீ. தொலைவிலும் திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்த தலம் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 147 ஆவது தலமாக திருத்தலமாக காவிரியின் தென்கரையில் திருஞான சம்பந்தர் ,திருநாவுக்கரசர் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவார பாடல்களை பெற்று திகழ்கிறது .ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் ஜோதியாக விளங்கும் இறைவன் அருவாய் உருவாய் அருவுருவாய் பற்பலராலும் வழிபடப் பெரும் தன்மைஉடையவன்.அந்த பரம்பொருளாகிய சிவபெருமான் உலகெலாம் உணர்ந்து ஓதற்காக சிவலிங்க உருக்கொண்டு எழுந்தருளி தம்மை நாடி வந்து அன்பர்கள் வழிபட்டு ,ஆன்மாக்கள் கடைத்தேற அருளிச்செய்யும் திருத்தலங்கள் பல பல. அவற்றுள் பொன்னி வளந்தரும் சோழ வள நாட்டின் கண் எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது உலகாண்ட கோட்செங்கட்சோழ நாயனாரால் நிர்மாணிக்கப்பட்ட சிறப்புஉடையதும் ,அழிவில்லாத தலமாகவும்,தன்னை நாடி வந்து வழிபடுவோர்க்கு கேடில்லா வாழ்வளிக்கும் இறைவனான அருள்மிகு கேடிலியப்பர் பெருமான் எழுந்தருளி ஆட்சி செய்து வரும் புண்ணிய தலமாகவும் ,அருள்மிகு அஞ்சுவட்டதம்மன் ,அருள்மிகு குபேரன் போன்ற தெய்வ சன்னதிகள் பொலிவுடன் விளங்கும் சிறப்பானதும்,முருகபெருமானின் வீரஹத்திதோசம்(கொலைபாவம் ) தீர்த்ததலமாகவும் தமிழ் முனியாம் குறுமுனி அகத்தியர் காலத்திற்கு முன்பே திகழ்கின்ற பெருமைக்குரிய திருத்தலமாகவும் விளங்குவது திருகிழ்வேளூர் திருத்தலமாகும்.
உமாதேவியாரிடம் ஞானப்பால் உண்ட காழிவேந்தர் தம் திருவாயால் திருகீழ்வேளூர்திருத்தலத்தைபெருந்திருகோவில்என்றுபாடிஉள்ளசிறப்புடையதிருத்தலமாகும்.சூரபத்மாதியர்களை சம்ஹாரம் செய்த வீரஹத்தி தோஷம் நீங்க தமிழ்க்கடவுளாம் முருகவேல் பாலசுப்ரமணியராக தவமியற்றி வழிபாடு செய்த தலம் இதுவாகும் தேவருலகில் முருகபெருமான் எழுந்தருளிருக்கும் "ஞானஸ்கந்தபுரி " மேல்வேளூர் என்று சிறப்பித்து அழைக்கபடுவதால் ,பூஉலகில் அவர்தவமியற்றிய இத்தலம் "கீழ்வேளூர் "என்று பெயர் பெற்று விளங்குகிறது .   தேவர்களும் ,அசுரர்களும் கடைந்து பெற்ற அமிர்த கலசத்திலிருந்து விழுந்த ஒரு துளி அமிர்தம் இரண்டாக பிரிந்து  இப்பாரத புண்ணிய புமியின் வடக்கிலும் ,தெற்கிலும் விழுந்து இலந்தை வனங்களாக உருவெடுத்தன. (இலந்தை - பதரி ) வட இந்தியாவில் உருவான இலந்தை வனமே உத்தர பதரிகாரண்யம் எனப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் திருத்தலமாகும்.தென்திசையில் ஏற்பட்ட இலந்தை வனம் தஷினபதரிகாரண்யம் அதாவது தென் இலந்தை வனம்.இந்த வனமே திருகீழ்வேளூர் ஆகும்.தன் முற்பிறவி புண்ணியத்தால்,"எண்டோளீசர்க்கு எழில் மாடம் எழுபது செய்து உலகாண்ட"அறுபான் மும்மை நாயன்மார்களுள்  ஒருவரான சிலந்தி சோழனாம் கோட்செங்கச்சோழன் கட்டுவித்த எழில் திகழ்  மாடக்கோயிலாக இத்திருக்கோவில் திகழ்கிறது .தன் முற்பிறவியில் யானையோடு தமக்கு சிவ வழிபாட்டில் ஏற்பட்ட பிணக்கை மனத்தில் நிறுத்தியவாறே அரசன் யானை ஏறா மாட கோயிலாக தான் கட்டிய அனைத்து ஆலயங்களையும் நிர்மாணித்தார் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.  "எங்குங்கேடுண்டாயும் இத்தலம்  கேடின்மையால்   தங்கும் கேடில்லாதவன் ஆனோன் "
                                   கீழ்வேளூர் உலா
அந்தகக்கவி வீரராகவ முதலியார் தனது   கீழ்வேளூர் உலாவில் கூறியது போல ,கேடிலியப்பராக இத்திருத்தலத்தில் அருள்பாலித்து வரும் இறைவன் எழுந்து அருளி உள்ள தலத்தை கேடின்மையைக்காட்டும் பொருட்டு அடித்தளம் முதல் விமானம் வரை முழுவதும் கருங்கல்லாலேயே கற்றளியாக அமைத்து சிறப்பு சேர்த்துள்ளார் சிலந்தி சோழர்.சித்திரகூடபர்வதம் என்று சிறப்பித்து அழைக்கப்படும் கட்டுமலை மீது எழுந்து அருளி அட்சி செய்வதால் இத்தல இறைவன் சித்ரகூடேசன் எனப்படுகிறார்.